Take a fresh look at your lifestyle.

மூன்று குழந்தைகளின் உணர்ச்சிப் போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லும் திரைப்படம் ‘நாங்கள்’

105

கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ் பேனரில் ஜிவிஎஸ் ராஜு தயாரிப்பில் அவினாஷ் பிரகாஷ் இயக்கத்தில் மூன்று குழந்தைகளின் உணர்ச்சிப் போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லும் திரைப்படம் ‘நாங்கள்’

சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளை அள்ளிய ‘நாங்கள்’ திரைப்படத்தை எஸ் எஸ் ஐ புரொடக்ஷன் சார்பில் எஸ் சுப்பையா ஏப்ரல் 18 அன்று திரையரங்குகளில் வெளியிடுகிறார்

ஏ ஆர் ரஹ்மான் பயிற்றுவித்த ஃபிர்தவுஸ் ஆர்கெஸ்ட்ரா குழுவினரை பயன்படுத்தி வேத் ஷங்கர் சுகவனம் இசையமைத்துள்ள ‘நாங்கள்’ திரைப்படம் லைவ் சவுண்ட் முறையில் முழுக்க படமாக்கப்பட்டிருக்கிறது

திரைப்படக் கல்லூரியில் முறையாக படத்தொகுப்பு, திரைக்கதை அமைப்பு மற்றும் இயக்கம் உள்ளிட்டவற்றை பயின்று எண்ணற்ற விளம்பரப் படங்களில் பணியாற்றி இருக்கும் அவினாஷ் பிரகாஷ் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘நாங்கள்’.

கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ் பேனரில் ஜிவிஎஸ் ராஜு தயாரித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கி இருப்பதோடு இதன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பையும் அவினாஷ் பிரகாஷ் கையாண்டுள்ளார்.

மூன்று குழந்தைகளின் உணர்ச்சிப் போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லும் திரைப்படமான‌ ‘நாங்கள்’, ராட்டர்டாம், மோஸ்ட்ரா சாஓ பாவ்லோ, ஜியோ மாமி, மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு தரப்பினரின் உளப்பூர்வ பாராட்டுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, திரையரங்கு வெளியீட்டுக்கு தயாராகி வரும் ‘நாங்கள்’ திரைப்படத்தை எஸ் எஸ் ஐ புரொடக்ஷன் சார்பில் எஸ் சுப்பையா ஏப்ரல் 18 அன்று வெளியிடுகிறார்.

படம் குறித்து பேசிய இயக்குநர் அவினாஷ் பிரகாஷ், “பெற்றோர் பிரிந்து வாழும் நிலையில் மிகவும் கண்டிப்பான தந்தையிடம் வளரும் மூன்று குழந்தைகள் வாழ்க்கையை எவ்வாறு கற்று கொள்கிறார்கள் என்பது தான் கதைக்கரு. படம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக அமைந்திருப்பதாக இதுவரை பார்த்த அனைவரும் மனமார பாராட்டி இருக்கிறார்கள். ஏப்ரல் 18 அன்று திரையரங்குகளில் வெளியாகும் போது ரசிகர்களும் வரவேற்பார்கள் என நம்புகிறேன்,” என்றார்.

மிதுன் வி, ரித்திக் எம், நிதின் டி ஆகியோர் மூன்று குழந்தைகளாக நடிக்க, அப்துல் ரஃபே மற்றும் பிரார்த்தனா எஸ் அவர்களின் பெற்றோராக நடித்துள்ளனர். முக்கிய பாத்திரத்தில் ராக்ஸி எனும் நாய் அற்புதமாக நடித்திருப்பதாக இயக்குநர் அவினாஷ் பிரகாஷ் தெரிவித்தார்.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ மற்றும் ‘அழகு குட்டி செல்லம்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த‌ வேத் ஷங்கர் சுகவனம் ‘நாங்கள்’ படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏ ஆர் ரஹ்மான் பயிற்றுவித்த துபாயை சேர்ந்த ஃபிர்தவுஸ் ஆர்கெஸ்ட்ராவை அவர் பயன்படுத்தியுள்ளார். வேத் ஷங்கர் சுகவனம் இசையில் சுஜாதா நாராயணன் பாடல் வரிகளில் சைந்தவி பாடியுள்ள கனவே எனும் உள்ளத்தை தொடும் பாடல் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. லைவ் சவுண்ட் முறையில் இப்படம் முழுக்க படமாக்கப்பட்டுள்ளது.

இதர குழுவினரின் விவரம்: தயாரிப்பு வடிவமைப்பு: விராஜ் பால ஜெ, சிங்க் சவுண்ட்: முகமது சஜித், ஒலி வடிவமைப்பு: சச்சின் சுதாகரன் ஹரிஹரன் எம் (சிங்க் சினிமாஸ்), சவுண்ட் மிக்ஸிங்: அரவிந்த் மேனன், பப்ளிசிட்டி டிசைன்: பொன் பாலாஜி, தயாரிப்பு நிர்வாகி: கிருஷ்ணசேகர் டி எஸ், டிஐ: யுகேந்திரா (கிராஃப்ட்ஸ் வொர்க்ஸ்), தயாரிப்பு ஒருங்கிணைப்பு: சாதிக் ஏ எம், மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.